Pages

Sunday, December 30, 2007

திரு. T M சௌந்தரராஜன் - ஒரு சகாப்தம்

தமிழ் இசையைப் பொறுத்தமட்டில் உலகின் கடைக்கோடியில் இருக்கும் தமிழனையும் சென்றடைவது திரை இசை மட்டுமே என்பது மறுக்க முடியாத உண்மை.. அத்தகைய திரையிசையில் முடிசூடா மன்னராக விளங்கிய திரு. T M சௌந்தரராஜன் அவர்களைப் பற்றியே இந்த கட்டுரை..

பிறப்பால் தமிழலரல்லாத இவரது தமிழின் ஆளுமைத்திறன் இன்றைய பாடகர்களை வெட்கித் தலைகுனியச் செய்யும்.. ஆம், இவர் மதுரையில் பிறந்த ஒரு சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்.. "அந்தக்காலத்தில் இவர்களால் அவ்வளவு சரளமாக தமிழில் உரையாட முடியாது.. குழாயடி சண்டைகளின்போது கூட தமிழில் மற்றவர்கள் இவர்களைத் திட்டினால், அவர்களுக்கு ஈடுகுடுக்க முடியாமல் இவர்கள் பதிலுக்கு எல்லாம் உனக்குத்தான்" (நீ திட்டியது அனைத்தும் உன்னையே சேரும் என்கிற அர்த்தத்தில்) என்ற ஒரே வார்தையை மட்டுமே பயன்படுத்துவார்கள்" என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.. இத்தகைய பின்புலத்தில் வந்த ஒரு மனிதனால் சுத்தமான சுந்தரத்தமிழில் பாட முடிந்தது என்றால் அது ஆச்சர்யப் படவேண்டிய விஷயம் அல்லவா..

இவரிடம் பக்தி ரசம் சொட்டும் அருணகிரிநாதரின் முத்தைத்தரு பத்தித்திருநகை -யும் வரும்.. மேற்கத்திய இசையை அடிப்படையாகக் கொண்ட யார் அந்த நிலவு-ம் வரும்.. காதல் (ஞாயிறு என்பது பெண்ணாக), வீரம் (அச்சம் என்பது மடமையடா), பக்தி (சிந்தனை செய் மனமே), பாசம் (மலர்களைப் போல் தங்கை உறங்குகின்றாள்), சோகம் (தரை மேல் பிறக்க வைத்தான்). தத்துவம் (மனிதன் நினைப்பதுண்டு்) என்று மனிதனின் அத்தனை உணர்ச்சிகளையும் தன் பாடல்களில் மிக அற்புதமாக வெளிப்படுத்தியவர்..

அற்புதமான வரிகளைக் கொண்ட பாடல்களை திரு. கண்ணதாசன் இயற்றினாரென்றால், அதற்கு திரு. M S விஸ்வநாதன் அருமையாக மெட்டமைத்திருப்பார்.. அதை அடித்தட்டு மக்களிடம் கூட கொண்டுசென்று சேர்த்தவர் திரு.T M சௌந்தரராஜன் அவர்கள்தான் என்றால் அது மிகையாகாது.. முறையாக சங்கீதம் பயின்றவராதலால், திரையிசையோடு நின்றுவிடாமல் கர்நாடக இசையிலும் ஜொலித்தவர் இவர்..

இறுதியாக திரு. வைரமுத்து அவர்கள் சமீபத்தில் நமது T M சௌந்தரராஜனைப் பற்றி கூறியதையே நானும் இங்கே கூற விரும்புகிறேன்.. "இப்படியயொரு கலைஞன் அமைவது மீண்டும் அரிது. காது படைத்தவர்களே! வாழும்போதே கொண்டாடுங்கள் அந்த ஆலய மணிக்குரல் நாயகனை! "..

நன்றி!!

Friday, December 28, 2007

எனது முதல் அனுபவம்

தலைப்பைப் பாத்துட்டு எதோ கிளுகிளுப்பான விஷயமா இருக்கும்னு ரொம்ப ஆர்வமா படிக்க ஆரம்பிக்கிறவுங்க தயவு செய்து என்ன மன்னிச்சிடுங்க...இது அந்த மாதிரியான விஷயம் இல்ல.. ஒரு சாதாரண மனுஷன் (வேற யாரும் இல்லங்க - நான்தான்) வாழ்கைல முதல் தடவையா போலீஸ் ஸ்டேஷன்க்கு போனா அவனோட அனுபவங்கள் எப்படி இருக்கும் அப்படிங்குறதுதான் இந்த தலைப்போட அர்த்தம்...

2 மாசத்துக்கு முன்னாடி என்னோட மொபைல் போனை நான் தொலைச்சிட்டேங்க.. அதுக்கு, நான் குடியிருக்குற எரியாவோட ஏர்போர்ட் ரோடு போலீஸ் ஸ்டேஷன்க்கு ஒரு கம்ப்ளைன்ட் குடுக்கலாம்னு போனேன்.. ஆட்டோல போகும்போதே மனசுக்குள்ள எதோ சொல்லமுடியாத ஒரு பரபரப்பு.. என்ன நடக்குமோ ஏது நடக்குமோன்னு ஒரு கலவரமான எதிர்பார்ப்பு.. வாசல்ல இறங்குனதும் அப்படியே பாத்தேன்.. இங்க பெங்களூர பொருத்தவரைக்கும் போலீஸ் ஸ்டேஷன் கொஞ்சம் நல்லாவே இருந்துது .. (நம்ம ஊர் மாதிரி டிபிகல் சிகப்பு கலர் செங்கல் பில்டிங் இல்ல..) இப்படியாக, ஒரு வழியா போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள புகுந்துட்டேன்.. உள்ள நுழையும்போதே யாருக்கோ கவனிப்பு நடந்துக்கிட்டுருந்த சப்தம் கேட்டது.. கொஞ்சம் கலவரத்தொட "என்ன பண்றது இப்போ .. சார்னு ஒரு சப்தம் குடுக்கலாமானு" யோசிச்சுகிட்டு அப்படியே நின்னுக்கிட்டுருந்தேன்..

அப்போ உள்ள இருந்த வந்த ஒரு போலீஸ்காரர் என்ன வேணும்னு கன்னடால கேட்டாரு.. கம்ப்ளைன்ட் குடுக்கணும்னு இங்கிலிஷ்ல சொன்னேன்.. "ரைட்டர் வெளிய டீ சாப்பிட போயிருக்காரு, 2 நிமிஷத்துல வந்துருவாரு அந்த பென்ச்ல உக்காருங்க" அப்படின்னு அவரும் இங்கிலிஷ்ல சொன்னாரு.. "அப்பாடா! மொழிப் பிரச்சனை இல்லேன்னு நிம்மதியா அந்த பென்ச்ல உக்காந்து ரைட்டருக்காக வெய்ட் பண்ண ஆரம்பிச்சேன்.. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழிச்சி அந்த ரைட்டர் வந்தாரு.. என்ன கம்ப்ளைன்ட் குடுக்கனும்னு அவரும் ஒரு மாதிரியான இங்கிலிஷ்ல கேட்டாரு.. நான் விஷயத்த சொன்னேன். "சரி, நீங்க எங்க குடி இருக்கேங்க" .. "ஏர்போர்ட் ரோடு-ல தான் சார்".. "அடடா, அது நம்ம கன்ட்ரோல்ல வராதே, நீங்க நேரா HAL போலீஸ் ஸ்டேஷன் போய் உங்க கம்ப்ளைன்ட்ட குடுங்க.. " இப்படி சொல்லிட்டு சிரிச்ச முகத்தோட என்ன வழயனுப்பி வச்சார்..

நானும் சரின்னு சொல்லி நேரா கெளம்பி HAL போலீஸ் ஸ்டேஷன்க்கு போனேன்.. அங்கயும் இதே கதை தான்.. உள்ள யாருக்கோ கவனிப்பு நடந்துக்கிட்டுருக்க நான் வெளிய ஒரு மணி நேரம் காத்திருந்தேன்.. ரைட்டர் வந்து விஷயத்த கேட்டுட்டு, "சரி, நீங்க எங்க குடி இருக்கேங்க" - "ஏர்போர்ட் ரோடு-ல தான் மேடம்".. ஆமாங்க, இங்க இருந்தது ஒரு லேடி ரைட்டர்.. சரி, இங்க கண்டிப்பா நம்ம கம்ப்ளைன்ட எடுத்துபாங்கன்னு நம்பிக்கையோட இருந்தேன்.. அந்த ரைட்டர் "நீங்க உங்க மொபைல் எங்க தொலைச்சீங்க " - "சரியா தெரியலைங்க" - "சரி, கடைசியா எப்போ போன் பண்ணினீங்க" - "ஆபீஸ்ல இருக்கும்போது எங்க வீட்டுக்கு பேசினேன்" - "ஆபீஸ் எங்க இருக்கு" - "மான்யாதா" - "அப்போ நீங்க அங்க இருக்குற போலீஸ் ஸ்டேஷன்லதான் கம்ப்ளைன்ட் குடுக்கணும்"
இப்படியாக எங்க உரையாடல் முடிஞ்சதும் என்ன அவுங்களும் வழியனுப்பி வைச்சுச்சுட்டாங்க..

எங்க ஆபீஸ் என் வீட்டுல இருந்து சுமார் 20 கிலோமீட்டர் இருக்கும் .. திரும்பவும் போய் அலையுறதுக்கு எனக்கு உடம்புல தெம்பில்லாம சரின்னு அந்த மொபைல் தொலைஞ்சது தொலஞ்சதாவே இருக்கட்டும்னு நான் வேற புது மொபைல் வாங்கிட்டேங்க.. அங்க போய் கம்ப்ளைன்ட் குடுத்துருந்தா கண்டிப்பா கேஸ் பைல் பண்ணிருப்பாங்கன்னு எனக்கு நம்பிக்கை இருந்தத நான் கண்டிப்பா இங்க சொல்லிஆகனும்.. இப்படியாக என்னோட முதல் அனுபவம் ஓரளவுக்கு நான் எதிர்பாத்தமாதிரி இல்லாம நல்லபடியா இருந்தது..

சரி, இப்போ முடிவுரை எழுத ஆரம்பிக்கலாமா..
1. நான் தமிழன்றது தெரிஞ்சுதோ தெரியலையோ , நான் ஒரு கன்னடன் இல்லேங்குறது அவுங்களுக்கு கண்டிப்பா தெரிஞ்சுருக்கு .. ஆனாலும் எந்த வித வித்தியாசமும் இல்லாம என்ன நல்லபடியா அணுகியமுறை எனக்கு ரொம்ப சந்தோசத்த குடுத்ததுனு சொல்லுவேன்..
2. ஸ்டேஷனுக்குள்ள ஜெயில்-ல ஒருத்தர போட்டு அடி பிண்ணிக்கிட்டு இருந்தாங்கன்னு சொன்னேன்ல .. அந்த மனுஷனோட அலறல் சப்தம் அடுத்த 2 நாளுக்கு என் காதுல கேட்டுக்கிட்டே இருந்ததுங்க.. இதுக்கெல்லாம் நாம ஒண்ணும் பண்ண முடியாதில்லயா.. அதனால நாம இதையும் விட்ருவோம்..
3. அங்க இங்கன்னு என்ன அலையவிட்டாங்கங்குறது மட்டும் தான் எனக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது.. இருந்தாலும் அதுவும் சரிதான்னு தோணுது .. ஆமாங்க, அந்தந்த ஏரியாவ பத்தி அந்த போலீஸுக்குதான தான தெரியும்..

அந்த லேடி ரைட்டர் மட்டும் என்ன உக்கார சொல்லவே இல்ல .. இருந்தாலும் நான சேர இழுத்து போட்டுட்டு உக்காந்தேன்.. அப்போ எனக்கு அது பெரிய விஷயமா தெரிஞ்சது .. இப்போ நெனைச்சு பாத்தா, அது ஒரு
விஷயமாவே தெரியல.. ஆமாங்க, அவுங்களுக்கும் எவ்வளோ வேலைப்பளு, மன அழுத்தம் இருக்கும் ஒவ்வொரு நாளும்..

நாம கம்ப்ளைன்ட் குடுத்தா அத கண்டுபுடிச்சு தந்துருவாங்களானுனு எனக்கு தெரியாது .. ஆனாலும் நான் இங்க கேட்டுகுறது என்னனா யாரும் தயவு செய்து போலீஸ் ஸ்டேஷன்க்கு போறதுக்கு பயப்பட வேண்டாம்ங்குறதுதான்

பின் குறிப்பு : சமீபத்துல நான் என்னோட சொந்த ஊருக்கு போனபோது அங்கதான் என்னோட மொபைல் தொலஞ்சதுனு சொல்லி எனக்கு தெரிஞ்சவங்கள வச்சு கம்ப்ளைன்ட் குடுத்து, போலீஸ் ஸ்டேஷனுக்கே போகாம கேஸ் பைல் பண்ணிட்டேன் :-)

நன்றி!!