Pages

Tuesday, February 07, 2012

தவறும், நேர்மையும்


இரண்டு நாட்களுக்கு முன்பு - இரவு உணவை முடித்து கொள்வதற்காக, வேளச்சேரியில் இருக்கும் ஒரு உணவகத்திற்கு சென்றிருந்தேன்..
சென்னையில் இருக்கும் பெயர்பெற்ற, சிறந்த உணவகங்களில் அதுவும் ஒன்று.. அதன் வேளச்சேரி கிளைக்குத்தான் நான் சென்றிருந்தேன்..

நான் அடிக்கடி செல்லும் உணவகம் அது என்பதால் அங்கிருக்கும் பெரும்பாலான சர்வர்கள் எனக்கு பரிட்சயமாகிவிட்டார்கள்.. கிட்டத்தட்ட அனைவரது பெயர்களும் (வட இந்திய பணியாளர்கள் தவிர) எனக்கு தெரியும் என்பதால், அவர்கள் பெயரை சொல்லி அண்ணா என்று தான் அழைப்பேன்.. சர்வர்களை பெயர் சொல்லி அழைத்து சிநேகமுடம் பழகுவது இது போன்ற உயர்தர சைவ உணவகங்களில் நடப்பது மிகவும் அரிது என்றே நினைக்கிறேன்.. இதைப் பார்க்கும் என் அருகிலிருப்பவர்கள், ஏதோ காணக்கிடைக்காத ஒன்றை கண்டது போல் ஆச்சர்யமாக பார்ப்பார்கள்..
As usual, I never mind that.. :-)

அன்றும், வழக்கம் போல எனக்கான பதார்த்தங்களை ஒரு சர்வரிடம் வேண்டிவிட்டு காத்திருந்தேன்.. எனக்கு அருகில் அமர்ந்திருந்த ஒரு குடும்பத்தினர் அப்போதுதான் சாப்பிட்டு முடித்துவிட்டு, பில்லுக்காக காத்துக்கொண்டிருந்தனர்.. என் டேபிளையும், அருகிலிருந்த டேபிளையும் அந்த ஒரே சர்வர் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.. 

பில்லும் வந்தது.. அந்த குடும்பத்தின் பெண்மணி பில்லை சரிபார்த்துவிட்டு தன் கணவரது காதில் ஏதோ கிசுகிசுத்தார்.. அவர்கள் அருந்தியிருந்த ஒரு காபி பில்லில் விடுபட்டுப் போயிருந்தது தான் சமாசாரம்.. அந்த நேர்மையான குடும்பத் தலைவர், உடனடியாக எழுந்து அருகில் நின்றிருந்த மேற்ப்பார்வையாளரிடம் அதை சுட்டிக்காட்டி, தன் குடும்பத்தினர் அருந்திய காப்பியையும் பில்லில் சேர்க்கச் சொன்னார்..
அதை பார்த்துக்கொண்டிருந்த நான், உலகில் நேர்மை இன்னும் முழுமையாக அழிந்துவிடவில்லை என்று நினைத்து மகிழ்ந்தேன்..

உடனே தனியாக ஒரு பில்லை காப்பிக்காக தயார் செய்த மேற்பார்வையாளர், அதை அக்குடும்பத்தினரிடம் கொடுத்துவிட்டு - தவறுக்கு மன்னிப்புக்கேட்டு அவர்களது நேர்மையையும் பாராட்டினார்.. 

என் மகிழ்ச்சி நெடுநேரம் நீடிக்கவில்லை.. பிறகுதான் வினையே ஆரம்பித்தது (அந்த சர்வருக்கு).. அக்குடும்பத்திற்கு பரிமாறிய சர்வரை, அந்த மேற்பார்வையாளர் தனியாக அழைத்துக் கொண்டு உள்ளே சென்றார்.. என்னை வேறொரு சர்வர் கவனிக்க ஆரம்பித்திருந்தார்.. 

சற்று நேரம் கழிந்தது.. அந்த சப்ளையர் பேயறைந்த முகத்துடன் வெளியே வந்தார்.. வந்தவர் எங்கும் நில்லாமல் உணவகத்தை விட்டு வெளியேறினார்.. 
இதை பார்த்துக்கொண்டிருந்த எனக்கு பலத்த அதிர்ச்சி மேலிட்டது.. 
கண்டிப்பாக அந்த சர்வருக்கு நன்றாக திட்டு விழும் என்று மட்டும் தான் நான் எதிர்பார்த்திருந்தேன்.. வேலை போய்விடும் அளவிற்கு விபரீதம் நிகழும் என்று நினைத்து கூட பார்க்கவில்லை.. அவர்கள் சாப்பிட்ட உணவுகளை பட்டியலிட்டு, கவுண்டரில் உள்ள கணக்கரிடம் பில்லை தயார் செய்யும் பொழுது, அக்குடும்பத்தினர் அருந்தியிருந்த  காப்பியை சப்ப்ளையர் மறந்துவிட்டிருந்தார்.. 

அங்கு சாப்பிட செல்லும் தருணங்கள் தவிர எனக்கு அந்த சர்வர் எந்த விதத்திலும் பரிட்சயம் இல்லாதவர்.. இருந்தபோதிலும், நான் அறிந்தவரை அவர் வேண்டுமென்றே அந்த தவறை செய்திருக்க வாய்ப்பில்லை என்றே கருதுகிறேன்.. 

அந்த சர்வர் செய்தது கண்டிப்பாக தவறுதான்.. (தெரிந்து செய்த தப்பு அல்ல..தவறிப்போய் செய்த தவறு தான்).. அதன் மூலம் அவர் எந்தவித ஆதாயத்தையும் அடைந்திருக்க வாய்ப்பில்லை என்று எண்ணும்போது, இதற்க்கான தண்டனை சற்று அதிகமோ என்றே தோன்றியது.. 

எனக்கு நிலைகொள்ளவில்லை.. அந்த மேற்ப்பார்வையாளரிடம் பேசலாமா என்று கூட தோன்றியது.. இருந்தாலும் அவசரப்பட்டு ஏதும் செய்திட வேண்டாம் என்று நினைத்துக்கொண்டிருந்த போது, என் உணர்வறிந்த (தற்போது பரிமாறிக்கொண்டிருந்த) சர்வர் என்னிடம் வந்து மெதுவான குரலில் என்ன நடந்தது என்று விவரித்தார்.. 

தவறு செய்த அந்த சர்வருக்கு உள்ளே சென்றதும் நன்றாக திட்டு விழுந்திருக்கிறது.. அவருக்கான தண்டனை - 'அன்றைய நாளில் மேற்கொண்டு எந்த வேலையும் செய்யாமல் கிளம்பி விடவேண்டும், அவரது மாத சம்பளத்தின் ஐந்து நாள் பங்கு பிடிக்கப்படும் என்பதுதான்'..  அவரது வேலையே பறித்து அதிகபட்ச  தண்டனை அளிக்காமல், அவருக்கு அளிக்கப்பட இது போன்ற சிறிய அளவிலான தண்டனை என்னளவில் சரியென்றே படுகிறது.. (என்னளவில் இது சிறிய தந்தையாக இருக்கலாம்.. அவருக்கு ஐந்து நாள் சம்பளம் என்பது சற்று பெரிய தண்டனையாகவே இருக்கும் என்று நினைக்கிறேன்)..
இந்த சம்பவத்தை அந்த சர்வர் தன் தவறுகளிலிருந்து திருத்திக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக எடுத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்..

இதை மற்றொரு கோணத்திலும் நான் நினைத்துப் பார்க்க தவறவில்லை.. 
சர்வர் செய்த அந்த மனித தவறை பெரிதுபடுத்தாமல், அக்குடும்பத் தலைவர் மேற்ப்பார்வையாளரிடம் சென்று முறையிடுவதை விடுத்து, அந்த சர்வரிடமே தவறை சுட்டிக்காட்டி இருக்கலாமோ என்றும் தோன்றியது.. எனக்கு பழக்கமில்லாத சர்வராக இருந்தாலும் நான் இதை தான் செய்திருப்பேன்..  :-)

நன்றி!!

Thursday, January 19, 2012

எதிர்மறையின் வெளிபாடு

சில் நாட்களுக்கு முன்பு, இலக்கின்றி இணையத்தை மேய்ந்து கொண்டிருந்தபொழுது என் கண்ணில் தட்டுப்பட்ட ஒரு கட்டுரையில் படித்தது - "உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் கண்டிப்பாக நேர்மறை/எதிர்மறை என்று இரு வேறு விதமான பக்ககங்கள் உண்டு"..  (ஆங்கிலத்தில் "Every man in this world has a positive & negative side within them" என்று சொல்லலாம்).. 

உலகில் உள்ள மற்றவர்களை விட்டுவிட்டு என்னை மட்டும் முன்னிறுத்தி யோசித்துப் பார்த்தால், எனக்குள்ளும் அது போலானதொரு இரு வேறு பரிணாமங்கள் உண்டு என்பதுதான் உண்மை. ஆனாலும், அதை முழுமையாக ஏற்றுக்கொள்வதில் எனக்கு சங்கடங்கள் இருந்தது.. எங்கே, இப்படி ஏற்றுக்கொண்டுவிட்டால்  அந்த சிந்தனைகள் என்னை முழுமையாக ஒரு விதமான கீழ் நிலைக்கு (downgrade) இறக்கிச்சென்று விடும் என்பது தான் காரணமாக இருந்திருக்க வேண்டும்..

பொதுவாகவே என் கோபத்தை நான் எப்பொழுதுமே வெளிக்காட்டிக் கொள்வதில்லை.. சில சமயங்களில் அதிகபட்சமாக எரிச்சல் அடைந்ததுண்டு.. அந்த சமயங்களில் கூட, கோபத்தை வெளிகாட்டிக் கொள்ளாமல் அதோடு அந்த இடத்தை விட்டு வெளியேறி விடுவேன்..

சமீபத்தில் எனக்கு நன்கு பரிட்சயமான ஒரு நபரிடம் விளையாட்டாக ஒரு விஷயத்தை பேச ஆரம்பித்து, அது வேறு ஒரு விதமாக வாக்குவாதத்தில் முடிந்தது.. அந்த தருணத்தில், நான் என்னுடைய கோபத்தை வெகுவாகவே வெளிப்படுத்தி விட்டேன்.. 

அந்த சம்பவம் நடந்த சில மணிகளுக்கு பின்பு யோசித்து பார்க்கையில், 'நானா இது போல் நடந்து கொண்டேன்' என்று ஆச்சர்யமாக உள்ளது.. எங்கள் இருவரது பக்கமும் தவறுகள் உண்டு.. அனால், என்னுடைய பக்கத்திலான தவறை நான் உணர்த்து கொண்ட பின்பும், அந்த நபரிடம் சென்று மன்னிப்பு கேட்க எனக்கு விருப்பம் இல்லை..

இங்கு - "கோபத்தை வெளிபடுத்தியது", "தவறு என் பக்கமும் உண்டு என்று தெரிந்தும் மன்னிப்பு கேட்க மறுப்பது", "அவரிடத்திலும் தானே தவறுள்ளது - முதலில் அவர் வந்து நம்மிடம் பேசட்டுமே.. - பின்பு நாம் மன்னிப்பு கேட்டுக்கொள்ளலாம்" என்பது போலான விஷயங்கள் தான் என் எதிர்மறையான பக்கத்தின் வெளிப்பாடு என்று நினைக்கிறேன்..

ஆம், I am no more an exceptional case for this.. 
என்னோடு பார்கின்ற/பழகுகின்ற அனைவரும் நான் எனது நேர்மறையான பக்கத்தை வெளிபடுத்தும் மனிதனாகவே காணப்படுகிறேன்.. அதே சமயம், எனக்குள்ளும் பலவிதமான எதிர்மறை சிந்தனைகள் உண்டு என்பது தான் உண்மை... 
(இன்னும் வெளிபடையாக சொல்ல வேண்டுமென்றால் - மேற்கூறிய விஷயங்களை தவிர்த்து பல விதமான வக்கிரமான சிந்தனைகள், அருவருக்கத்தக்க எண்ணங்கள், குரூரம்/வஞ்சம் போன்ற இயல்புகள் என்று பலவும் என்னுள் உண்டு).

இதோ, சில நாட்கள் கடந்துவிட்டது..
"ஒருவருக்கு நாம் தெரிந்தோ/தெரியாமலோ செய்கின்ற ஒரு காரியம் தப்பானது என்று உணர்ந்தால், அவரிடம் நாம் சென்று மன்னிப்பு கேட்க தாமதிக்கவோ தயங்கவோ கூடாது.. "என்னை மன்னித்து விடுங்கள்" என்று நாம் சொல்லும் அந்த வார்த்தைக்கு மிகவும் சக்தி அதிகம்.. அது பல இழப்புகளை காப்பாற்றி தரும்" - என்று என் நேர்மறை பரிணாமம் என்னை வழிப்படுத்த முயல்கிறது.. இறுதியாக நேர்மறை எதிர்மறையை வென்று விடும் என்று நினைக்கிறேன்.. வென்று விட வேண்டும் என்பது தான் என் ஆசையும் கூட..

இந்த விஷயத்தை பொதுப்படையாக பார்க்கபோனால் - என் எண்ணம் இதுதான்: "மனிதர்களில் - இவர் நல்லவர், இவர் மிகவும் நல்லவர் என்று பல்வேறு விதமான அளவைகளில் அடையாளப்படுத்தப்படுகின்றனர் அல்லவா.. அந்த அளவை தீர்மானிப்பது யாதெனில் அந்த மனிதர் எந்த அளவில் தன் எதிர்மறை பக்கங்களை மறைத்து வாழ்கின்றார் என்பதை வைத்துத்தான்"..


நன்றி!!

Monday, January 16, 2012

கால மாற்றம்..

மகன்: அப்பா, நீங்க எங்க போறிங்கன்னு எல்லாம்  நான் கேக்க மாட்டேன்..  ஆனா திரும்பி வரும் போது எனக்கு ஏதாவது வாங்கிட்டு வாங்கப்பா..
தந்தை: தம்பி, இது மாச கடைசிப்பா.. பாக்கெட்ல அஞ்சு பைசா இல்ல..
மகன்: அஞ்சு பைசாவா? அப்படின்னா?
தந்தை: அஞ்சு பைசாடா.. தெரியாதா?
மகன்: தெரியாதுன்றதுனால தானங்கப்பா கேக்குறேன்..
தந்தை: ????

சில நாட்களுக்கு முன்னர், என் தெருவிலுள்ள ஒரு சிறிய கடையில் நின்று  டீ குடித்துக் கொண்டிருந்தேன்..  அப்போது கடையின் எதிரிலுள்ள ஒரு வீட்டில், நான் பார்த்த தந்தைக்கும் மகனுக்குமான உரையாடல் தான் இது..


அந்தப்  பையனுக்கு சுமார் பத்து வயதும், அவன் அப்பாவிற்கு சுமார் முப்பத்தியைந்து வயதும் இருக்கும்..  முப்பத்தைந்து வயதான அந்த அப்பாவிற்கும், முப்பது வயதான எனக்கும் பரீட்சயமான ஐந்து பைசா, பத்து பைசா, இருபது பைசா போன்றவற்றையெல்லாம் கண்டிப்பாக அந்த சிறுவனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை..  ஏன், இருபத்தைந்து பைசாவைக்கூட அவன் கண்டிருக்கமாட்டான் என்பது தான் எனது அனுமானம்..

காலவோட்டத்தில் பல விஷயங்கள் நம்மை கடந்து போய்க்கொண்டே இருக்கிறது.. நான் முதன் முறையாக - தொலைபேசியில்  பேசியது என்னுடைய பதிமூன்றாவது வயதில்.. கணிப்பொறியை நேரில் கண்டது என்னுடைய பதினைந்தாவது வயதில்.. முதன்முறையாக அதை இயக்க ஆரம்பித்தது என்னுடைய பதினெட்டாவது வயதில்.. காரில் பயணித்தது பதிமூன்றாவதுவயதில்.. அனால் இன்றைய இளம்/பால்ய வயதினர் மிகவும் வேகமாக பயணிக்கின்றனர்..

இந்த வேகத்தைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது..
என் சிறுவயதில் (எண்பதுகளின் இறுதி/தொண்ணூறுகளின் துவக்கம்) என்னுடன் வியாபித்திருந்த Orson Black & White TV, VCR, "ராணி காமிக்ஸ், பூந்தளிர்" போன்ற பாலர் புத்தகங்கள், Promise Tooth Powder, திரைப்படம் ஆரம்பிப்பதற்கு முன்னர் போடும் நியூஸ் ரீல், தூர்தர்ஷனில் வாரா வாரம் ஒளிபரப்பாகும் ராமாயணம்/மகாபாரதம் தொடர்கள், "Gold Spot, Torino" போன்ற குளிர்பானங்கள், பண்டிகை காலங்களில் வீடிற்கு வரும் வாழ்த்து அட்டைகள், ஒரே தொடர்பு சாதனமாக அன்று அறியப்பட்ட கடிதம்/தந்தி, போக்குவரத்திற்கு பெரும்பாலும் உபயோகிக்கும் சைக்கிள் ரிக்க்ஷா/குதிரை வண்டி, மின்தடை நேரங்களில் கைகொடுக்கும் சிம்னி விளக்கு, என்று பல பொருட்கள்/விஷயங்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்கு தெரிந்திருக்கக்கூட வாய்ப்பில்லை.. :-)
அந்நாளைய பணத்தின் மதிப்பு மிகவும் குறைவாகவே இருந்தது..  ஊரில் இருந்த வரும் என் அப்பா, நான் சினிமா பார்க்கவேண்டும் என்பதற்காக என்னிடம் 10 ருபாய் குடுப்பார்.. நான் என் சித்தப்பாவை அழைத்துக் கொண்டு படத்திற்கு செல்வேன்.. ஹைக்ளாஸ் டிக்கெட் மூன்றரை ருபாய்/சைக்கிள் டோக்கன் எழுபத்தைந்து பைசா/பாப்கார்ன் பாக்கெட் ஒரு ருபாய் என்று அந்தப் பத்து ரூபாயில் சௌகர்யமாக படம் பார்த்துவிட்டு அதிலும் ஒன்னேகால் ருபாய் சேமிப்பேன்.. சில் மாதங்களுக்கு முன்பு நான் குடும்பத்தோடு படம் பார்க்கவேண்டுமென்று ஐந்து டிக்கெட் இணையத்தில் முன்பதிவு செய்தபோது ஆனா செலவு அறநூறு ருபாய் (டிக்கெட் ஒன்றிற்கு நூற்றி இருபது ருபாய் வீதம்).. இந்த செலவு டிக்கெட்டிற்கு மட்டும்தான்.. வீட்டிலிருந்து காரில் சென்ற பெட்ரோல் செலவு, இடைவேளையில் வாங்கித்தின்ற தின்பண்டங்கள் என்று கணக்கிட்டால் குறைந்தது எண்ணூறு ருபாய் வரும்.. இருவர் சென்றிருந்தால் தோராயமாக ஆகியிருக்கும் செலவு முன்னூறு ருபாய்.. 1990-ல் ஆன எட்டேமுக்கால் ரூபாய் செலவையும், 2011-ல் ஆன முன்னூறு ரூபாயையும் ஒப்பிட்டால் கிட்டத்தட்ட முப்பத்திநான்கு மடங்கு அதிகம்.. :-)

இன்னும்கூட ஒரு விஷயத்தை பகிரலாம் இங்கு.. எங்கள் ஊரான திண்டுக்கலில் அன்று தேன்மிட்டாய் என்ற ஒரு தின்பண்டம் ஐந்து பைசாவிற்கு இரண்டு கிடைக்கும்.. (அதுவே மதுரையில் ஐந்து பைசாவிற்கு ஒன்று மட்டுமே கிடைக்கும்).. என் பிறந்த நாளன்று எனக்கு கிடைத்த ஒரு ரூபாயை எடுத்துக்கொண்டு தேன்மிட்டாய் வாங்க கடைக்கு சென்றேன்.. பத்து பைசாவிற்கு நான்கு மிட்டாய் வாங்குவதுதான் என் எண்ணம்.. கடைக்காரரிடம் சென்று ஒரு ரூபாயை கொடுத்துவிட்டு தேன்மிட்டாய் கேட்டேன்.. ஆனால், பத்து பைசாவிற்கு தான் வேண்டுமென்று சொல்ல மறந்துவிட்டேன். அவர், நான் ஒரு ரூபாய்க்கும் தேன்மிட்டாய் கேட்கிறேன் என்று ஒரு பெரிய தினத்தந்தி பேப்பரை எடுத்து காட்டிக்கொடுக்க ஆரம்பித்துவிட்டார்.. (அன்று பிளாஸ்டிக் பை கலாசாரம் ஆரம்பித்திருக்கவில்லை தமிழ்நாட்டில்).. பின் ஒருவாறு, பத்து பைசாவிற்கு மட்டும் குடுத்தால் போதும்  என்று சொல்லி வாங்கிவந்தேன்.. :-)
அன்று தான் எனக்கு ஒரு ரூபாயின் பெருமை தெரிந்தது.. "ஒரு ரூபாய்னா இவ்வளோ பெருசான்னு" எனக்கு அந்த ஆச்சர்யம் அடங்க சில நாட்கள் பிடித்தது.. :-)

நன்றி!!

Monday, January 09, 2012

கடவுளும் பகுத்தறிவாளனும்

"அறை எண் 305 -ல் கடவுள்", திரைப்படத்தில் கடவுளும் பகுத்தறிவாளனும் மேற்கொள்ளும் விவாதம் கலந்த ஒரு உரையாடல் காட்சி மிகவும் அழகாக படமாக்கப்பட்டிருக்கும்..

இந்தக் காட்சியில், நாத்திகனுக்கு தன்னுடன் இருப்பது கடவுள் தான் என்பது தெரியாது.. காரணம் - கடவுளானவர் தன் அடையாங்களை இழந்துவிட்டு நம்மை போல் ஒரு சராசரி மனிதனாக வாழ்ந்துகொண்டிருப்பார் அந்தத் தருணத்தில்..
 

"கடவுள் என்பது யார்? அவர் இருக்கிறாரா இல்லையா?அவர் மனிதருக்கு தேவையா? தேவையெனில் எந்த விதத்தில்?" என்று பல விஷயங்களை மிகவும் கவனமாக இயக்குனர் சிம்புதேவன்  கையாண்டிருப்பார்..

என்னுடைய புரிதலின்படி, இந்த விவாத காட்சியில் கடவுளின் கை ஓங்கி இருப்பதாக காட்டப்பட்டிருந்தாலும், கடவுளாகப்பட்டவரின் வாயாலேயே "அன்புதான் கடவுள்.. மனிதனது வாழ்கையை பக்குவபடுத்தி, துன்ப காலங்களில் துணையாக இருக்க உதவும் ஒரு துணையே கடவுள்" என்று அருமையாக விளக்கப்பட்டிருக்கும்..

இவ்விடத்தில் திருமூலர் அருளிய திருமந்திரத்தில் வரும் ஒரு பாடலை பதிவிடுவது பொருத்தமாக இருக்கும்..

     அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
     அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
     அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின்
     அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே

இப்பாடலின் முதலிரு வரிகளில் - "அன்பும் சிவமும் வேறு வேறல்ல.. இரண்டும் ஒன்றுதான்" என்றும், பின்னிருவரிகளில் "அந்த அன்பிலே மனம் குழைபவரே கடவுளை அடைவர்.. அன்புதான் கனிந்து கனிந்து நிறைவு நிலையில் சிவம் ஆகிறது" என்றும் விளக்கப்பட்டிருக்கிறது..

முன்னிரு வரிகளுக்கு நான் உடன்பட்டாலும், பின்னிரு வரிகளுக்கு நான் முரண்படுகிறேன்.. :-)

 "கடவுள் என்றொருவர் உள்ளார்.. அவர் மேலிருந்து நம்மை காக்கின்றார்.. தவறு செய்பவர்களை தண்டிக்கின்றார்/ மன்னிகின்றார்" போன்று என் பால்ய வயதுகளில் ஊட்டப்பட்ட கருத்துக்களில் நம்பிக்கை இல்லாதவன் நான்..

"கடவுள் இல்லை என்பதுவே என்னுடைய கருத்து"..

"கடவுள் என்று (ஒருவர்) ஒன்று உண்டு. அது (அவர்) விளக்கப்பட வேண்டும்" என்று என்னிடம் கேட்டால், "நம்மிடம் அன்பு செலுத்தும் சக மனிதர்கள் தான் கடவுள்" என்பேன்.. இதுதான் என்னுடைய சிந்தனை..

நன்றி!!