Pages

Tuesday, August 04, 2009

படித்ததும், படிக்க விரும்புவதும்

என் அபிமானத்திற்குரிய திரு.வைக்கோ அவர்கள், இரண்டு வருடங்களுக்கு முன்பு நடந்த அமரர். கல்கியின் புகழ் போற்றும் விழாவில், அவரது "சிவகாமியின் சபதம்" பற்றி பேசிய மேடைப்பேச்சினை சமீபத்தில் கேட்டேன்..
அதைக் கேட்டதிலிருந்து கல்கியின் Master Pieces என வர்ணிக்கப்படுகின்ற "பார்த்திபன் கனவு", "பொன்னியின் செல்வன்", "சிவகாமியின் சபதம்" என்ற இந்த மூன்று படைப்புகளையும் படித்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மிகுந்துவிட்டது..
இங்கு பெங்களூரில் அதற்கான வாய்ப்புகள் அவ்வளவாக இல்லையென்பதால், அடுத்த வாரம் எனது ஊருக்கு ஒருவார விடுப்பில் செல்லும்போது குறைந்தபட்சம் எதாவது மலிவுவிலைப்பதிப்பாவது வாங்கி படித்துவிடவேண்டும் என்றிருக்கிறேன்..

இதற்கு முன்பே, நான் கல்கி அவர்களது படைப்புகளைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருந்தாலும், அவற்றைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தும் படித்ததில்லை..
சிறுவயதில் நான் ஒவ்வொரு வாரமும் நூலகத்திற்கு செல்வேன்.. என் தாத்தா என்னை அப்படி பழக்கிவிட்டிருந்தார்.. இந்தப்பழக்கம் நான் பத்தாவது முடித்தப்பின், அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்விட்டது.. (காரணம் ஒன்றும் புதிதில்லை - அந்த பதின் வயதிற்கே உண்டான வேறு சில விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து விட்டதுதான்..

கிட்டத்தட்ட ஐந்தாவது படிக்கும் வரையில் என்னுடைய அபிமானதிற்குரியது முல்லா, பீர்பால், தெனாலிராமன் வகையிலான நீதிக்கதைகள்தான்..
பிற்பாடு, தேவனின் "துப்பறியும் சாம்பு", சுஜாதாவின் கணேஷ்,வசந்த் ரீதியிலான துப்பறியும் கதைகளே என்னை ஆக்கிரமித்திருந்தது..
அப்போது, பொன்னியின் செல்வனைப் படிக்க வேண்டுமென்ற ஆசை/ஆர்வம் இருந்தாலும் கூட, அதன் எடை மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் என்னை படிக்கவிடாமல் செய்தன.. எங்கே புரியாமல் போய்விடுமோ என்ற அந்த வயதிற்கே உண்டான பயமும் ஒரு காரணம்.. இப்போது படித்தால் புரியும் என்கிற நம்பிக்கையில் படிக்கப்போகிறேன்.. பார்க்கலாம்..

பி.கு: இணையத்தில் தேடிப்ப்பிடித்து, கல்கி அவர்களது "சோலைமலை இளவரசி" என்கிற குறுநாவலைப் படித்துவிட்டேன்.. அவருடைய காட்சிகளை விவரிக்கும் பாங்கு, எழுத்து நடை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.. இப்போது பொன்னியின் செல்வனைப் படிக்க மிகவும் ஆர்வமாயிருக்கிறேன்..

இங்கே நம் திருவள்ளுவருடைய சிலை திறப்பிற்க்குப்பதிலாக, சர்வக்ஞர் என்கிற ஒரு கன்னட புலவருடைய சிலையை சென்னையில் திறக்கப் போகிறார்களாம்..
திருவள்ளுவர் எப்பேர் பட்டவர்.. அந்த தெய்வப்புலவருடைய குறள்கள், நம் வாழ்வின் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையிலும் நம்மை அறிவுறுத்தி, நல்வழிப்படுத்தும் வகையில் அமையப் பெற்றிருப்பதைக் காணலாம்.. (சிறுவயதில், ஒரு பந்தயத்திற்காக நூறு குறள்களை (விளக்கத்துடன்) மனப்பாடம் செய்ய முயன்று அதில் தோல்வி அடைந்திருக்கிறேன் என்பது ஒரு வேடிக்கையான மலரும் நினைவு)..
அப்படிப்பட்ட நம் வள்ளுவருக்கு இணையானவராக இப்போது காட்டப்படும் சர்வக்ஞர், உண்மையிலேயே தகுதி வாய்ந்தவர்தானா என்கிற சந்தேகம் எனக்கு மட்டுமல்ல, நம்மில் பலருக்கு எழும்பி இருப்பதில் ஆச்சர்யம் எதுவும் கிடையாது.. (இணையானவராக இருப்பின், மிக்க மகிழ்ச்சி)..
அவருடைய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பை, இணையத்தில் நான் தேடிப்பார்த்த வரையில் ஒன்றும் கிட்டவில்லை.. அடுத்த வாரம், பொன்னியின் செல்வனை வாங்கும்போது சர்வக்ஞருடைய படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்பு நூல் ஏதாவது கிடைக்குமா என்று பார்க்க வேண்டும்..

நன்றி!!