Pages

Monday, September 22, 2008

ஒரு சபிக்கப்பட்டவனின் குரல்

அலுவலகத்திற்குச் செல்லும் வழியிலே, நான் தினமும் பார்க்கிறேன்.. அனைவருமே தங்களது வாழ்க்கையை எவ்வித வரைமுறையும் இன்றி ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.. எனக்கோ, என்னுடைய நிரந்தரமான உடல் குறைபாட்டின் காரணமாக இங்கு ஒரு சாமான்யமான மனிதனது வாழ்கையே மறுக்கப்பட்டிருக்கிறது..

அலுவலகத்தில் எனது பணியிடமோ மூன்றாவது தளத்தில்.. ஒருநாள், அங்கு செல்வதற்காக மின்-இழுவை இயந்திரத்தில் (Lift) ஏறும்போது என்னுடன் ஒரு அழகான வட இந்தியப்பெண்ணும் ஏறினாள்.. சிநேகமாக சிரிக்கவும் செய்தாள்.. (அது என் மேல் உண்டான இரக்கத்தினால் வந்தது என்பதை நான் அப்போது உணரவில்லை).. எனது தளத்தில் இறங்கியவள் எனக்கு முன்னே சென்று, கதவை திறந்து தான் உள்ளே செல்லாமல் எனக்காக கதவை திறந்தபடியே காத்திருக்கலானாள்.. அவளைப் பொருந்தவரையில் அவள் எனக்கு செய்வது மனிதாபிமான அடிப்படையிலான ஒரு உதவி..ஆனால், அங்கே - அந்த இடத்திலே - அந்த நிமிடத்திலே நான் கூனிக்குறுகி நிற்பதாகவே உணர்தேன்.. என்னால் அந்த காரியத்தை செய்ய முடியாத பட்சத்தில், அவள் அப்படி செய்தாள் என்றால் தப்பில்லை.. என்னால் முடியும் என்று தெரிந்தும் அவள் செய்தது எனக்கு சங்கடத்தையே கொடுத்தது..
பொதுவாகவே நம் மக்கள் தங்களது உதவி செய்யும் மனப்பான்மையையும், தயாள குணத்தையும் மற்றவர்களுக்கு காட்ட நேரம் கிடைக்காதா என்றே காத்திருப்பார்கள் போலிருக்கிறது.. அந்த இடத்தில் அவள் நல்ல பெயர் எடுத்திருப்பாள், மறுப்பதற்கில்லை.. ஆனால் அந்த இடத்திலே இருந்த மற்றவர்கள் என்னை பார்த்த முறை எனக்கு அவ்வளவாக சுகப்படவில்லை.. மாறாக, வரும் நாட்களில் அவர்களும் இதை செய்ய ஆரம்பித்து விடுவார்களோ என்று எனக்கு பயத்தையே ஏற்படுத்தியது..

இன்றைய நாட்களிலே புதிய நட்புகள், புதிய அறிமுகங்கள் என்று அனைத்தையுமே தவிர்த்து விடவேண்டியதாக இருக்கிறது.. காரணம்? ஒன்றிரண்டு நாள் பழக்கத்திற்க்குப் பிறகு, நான் என்னுடைய மொத்த சரித்திரத்தையும் சொல்ல வேண்டியது இருக்குமே.. புதிய நட்புகள் இல்லையென்றாலும், பழைய நட்புகளையும் கூட தவிர்க்க வேண்டியிருக்கிறது.. ஆம், இந்த மூன்று வருட இடைவெளிக்குப்பின் என்னைப் பார்ப்பவர்களுக்கு நான் மிகவும் பலகீனமானவனாகவும், பரிதாபத்திற்க்குரியவனாகவுமே தோன்றுவேன்.. ""அப்புறம்?? என்னடா ??"" என்று தங்கள் புருவத்தை உயர்த்திக் கேட்கும் கேள்விகளுக்கு நான் பதில் சொல்ல வேண்டியது இருக்கும்..
என்னை நன்றாக புரிந்து கொண்டவர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய வெகு சிலரே.. என்னை புரிந்துகொள்ளாத எனது பழைய நட்புகளின் அகராதியிலே நான் ஒரு திமிர் பிடித்தவன் என்றே விளக்கப்பட்டிருப்பேன்.. பரவாயில்லை, அப்படியே இருந்து விட்டுப் போகிறேன்.. இப்பொழுதெல்லாம் நான் தனிமரமாகவே வாழப் பழகியிருக்கிறேன்.. ஆனால், இப்பொழுது இதிலும் ஒரு ஏகாந்த அமைதி நிலவுவதை நான் அனுபவப்பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்..

முன்பு ஒரு காலத்தில், ஒரு பெண்ணுடன் எனக்கு மிக நெருங்கிய நட்பு இருந்துவந்தது.. முதலில் நட்பாக ஆரம்பித்த பழக்கம், பின்னாளில் எனக்குள் காதலாக மாறியது.. எனது நட்பு காதலாக மாறிவிட்ட பிறகு, அவளின் மீதான என்னுடைய அணுகுமுறை முற்றிலும் மாற ஆரம்பித்து விட்டது.. ஆம்,அவளை எந்த ஒரு காரணத்திற்காகவும் இழந்து விடக்கூடாது என்று அதிகபட்ச உரிமை எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.. அதுவே அவளுக்கு நாளடைவில் என் மீது ஒரு வெறுப்பு வரக் காரணமாகிவிட்டது.. அப்படியே பிரிந்தும் விட்டோம்..
இங்கே என் காதல் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், அதற்கு அடிநாதமாக இருந்தது எனது இந்த உடல் பலகீனம் தான் என்று கண்டிப்பாக சொல்வேன்..
ஆகிவிட்டது பல மாதங்கள்.. அவளைப் பற்றி எந்த ஒரு தகவலுமே இல்லை.. என்னுடைய தொந்தரவுகள் எதுவும் இல்லாமல் அவள் நல்லபடியாகவே இருப்பாள் என்று நம்பிக்கொண்டு அமைதியாகவே இருந்துவிட்டேன்.. இதோ, சில நாட்களுக்கு முன்பு அவளை தொடர்பு கொள்ள நேர்ந்தது..அதிலே நான் தெளிவாக புரிந்துகொண்டது "அவளுடைய நினைவில் நான் இம்மியளவும் இல்லை" என்ற ஒன்றே ஒன்று தான் .. எத்தனையோ நிகழ்வுகள் அவளது வாழ்வில் நடந்திருந்தபோதிலும் , நான் முற்றிலுமாக மறக்கடிக்கப்பட்டிருக்கிறேன் அவளது நினைவுகளிலிருந்து என்பதை என்னால் கிரகித்துக்கொள்ள முடியவில்லை.. கண்களில் கண்ணீர் முட்டிவிட்டது.. இன்றும் அவளை எனக்கு மிகவும் பிடிக்கும்.. அவளின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு.. அதனால் தான் அவளிடமிருந்து வரும் ஒரு மிகச் சிறிய ஏமாற்றதைக்கூட என்னால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.. ஒருவேளை, நான் குறுக்கிடாத வாழ்கை அவளுக்கு நிம்மதி தருவதாக இருந்திருக்குமோ என்னவோ?
அப்படி இருக்கும் பட்சத்தில், நன்று - வாழ்க வளமுடன்..

அந்த கருப்பு நாளில் நடந்த விபத்திற்குப் பின்னால் வந்த முதல் ஒரு வருட காலம், நான் மிகவும் மன வலிமையுடன் நன்றாக தான் இருந்தேன்.. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை.. உடல் முற்றிலுமாக தளர்ந்து விட்டது.. அதுவும் கடந்த இரு மாத காலத்திலே அது மோசத்தின் உச்சத்தையே அடைந்துவிட்டது என்று சொல்லலாம்.. தொடர்ச்சியான உடல் உபாதைகள், அலைச்சல்கள் - என்று முற்றிலுமாக ஓய்ந்து விட்டேன்..இந்த ஒன்றரை மாதத்தில் நான் அலுவலகம் சென்றது அதிகபட்சம் ஐந்து நாட்கள் தான் இருக்கும்.. வீட்டிலிருந்தபடியே வேலை செய்து வருகிறேன்.. வீட்டில் கூட, எனக்கு வழக்கமாக இருக்கும் முக்கியத்துவம் சற்று குறைந்துவிட்டதாகவே எனக்கு தோன்றுகிறது..

பொதுவாகவே நமது சமூகத்தில் அறுபது வயதை ஒருவர் கடந்தால் அவர் முதியவர் என்று அழைக்கப்படுகிறார்.. ஆனால் அந்த முதுமையின் முதல் பருவம் எப்போது வரும் என்ற பார்த்தால் ஒரு நாற்பது முதல் நாற்பத்தைந்து வயதிலேயே வந்துவிடும்.. புரியும்படி சொல்வதானால், தன்னால் இதை செய்ய முடியும் என்று தனக்கே நன்றாக தெரிந்தாலும், அதை மற்றவர் நமக்கு செய்து கொடுத்தால் நன்றாக இருக்குமே என மனம் ஏங்க ஆரம்பிக்கும் காலகட்டம்.. அது ஆணாக இருக்கும் பட்சத்தில், தனது மனைவியின் துணையை தேட ஆரம்பிப்பான்..
இந்த இருபத்தியேழு வயதிலேயே நான் இருப்பது, கிடத்தட்ட அந்த நிலையில்தான்..
நான் பெங்களூரில் இருக்கும் நாட்களில், எங்காவது வெளியில் செல்ல வேண்டியிருந்தால் யாருடைய உதவியுமின்றி, பிரச்சனையில்லாமல் சென்று வந்து விடுவேன்.. ஆனால், அதுவே சென்னையில் என்றால், என்னையும் மீறி எனது கைகள் எனது தந்தையின் தோள்களையோ அல்லது எனது தம்பியின் தோள்களையோ பற்றி விடும் ..நாற்பத்தைந்து வயதிலே ஒரு ஆண் தனது மனைவியை துணையை தேடுவதற்கும், நான் இப்பொழுது எனது தந்தையின் தோளை தேடுவதற்கும் அவ்வளவாக வித்தியாசம் இல்லை என்றே சொல்வேன்..

இருபத்தியேழு வயதிலேயே என்னால் இந்தகைய இன்னல்களை தாங்கிக் கொள்வது கடினமாக இருக்கிறதென்றால், ஒரு பத்து வருடத்திற்குப் பிறகு என்னால் எப்படி முடியும் என்று நினைத்துப் பார்க்கவே பயமாக இருக்கிறது.. ஒரு நண்பன் என்னிடம் அடிக்கடி சொல்லுவான் - "எங்களிலே மனதளவில் நீதான் மிகவும் வலிமையானவன்".. முன்பெல்லாம், ஆம் என்று பெருமையுடன் ஒப்புக்கொள்வேன்.. ஆனால் இப்பொழுது, நான் வலிமையானவன் என்று என்னை நானே எமாற்றிக்கொண்டல்லவா இருக்கிறேன்.. என்னுடைய இழந்த அந்த வலிமையை நான் எப்பொழுது திரும்பப் பெறப்போகிறேன்? என்னுள் ஏதாவது ஒரு பேரசதிசயம் நடந்தால் மட்டுமே அது சாத்தியப்படும்..

பி.கு: இதை படிப்பவர்கள் சற்றே எரிச்சல் அடைய நேரிட்டால், தயவு செய்து மன்னித்துக் கொள்ளவும்.. நமக்குள்ளிருப்பவைகளை அவ்வப்போது எதாவது ஒரு வகையிலே வெளியேற்றி விடுவது நல்லதில்லையா? நமது முதல்வர் கலைஞர் கூட தனக்கிருக்கும் தனிப்பட்ட ஆற்றாமைகளை முரசொலியிலே அவ்வப்போது ஏதாவது கவிதைகள் முழங்கி தனித்துக் கொள்வார்.. அவருக்கு ஒரு முரசொலி என்றால் எனக்கு இதோ என்னுடைய வலைப்பூ இருக்கிறதே என்று புலம்பி தள்ளிவிட்டேன்... ஆகவே, தயவுசெய்து இதை படிப்பவர்கள் பொறுத்துக்கொள்ளவும்..
இது மற்றவர்களுக்காக எழுதியது அல்ல.. என்னுடைய மன உளைச்சல்களிலிருந்து விடுபட எனக்காக நானே எழுதிக்கொண்டது..

நன்றி!!

2 comments:

  1. "எனது தளத்தில் இறங்கியவள் எனக்கு முன்னே சென்று, கதவை திறந்து தான் உள்ளே செல்லாமல் எனக்காக கதவை திறந்தபடியே காத்திருக்கலானாள்"

    எங்கள் office-ல் இது மாதிரி செய்வது சாதாரணம். எனக்கு பின்னால் யாரேனும் வந்தால் நான் கதவைப் பிடித்துக்கொண்டு நிற்பதுண்டு. எனக்கு முன் செல்பவர்கள் எனக்காக கதவைத் திறந்து வைத்து நிற்பதும் உண்டு.

    "இங்கே என் காதல் ஏற்றுக்கொள்ளப்படாமல் மறுக்கப்பட்டதற்கு வேறு பல காரணங்கள் இருந்தாலும், அதற்கு அடிநாதமாக இருந்தது எனது இந்த உடல் பலகீனம் தான் என்று கண்டிப்பாக சொல்வேன்"

    ஒன்று மட்டும் தோன்றுகிறது -- என்ன காரணத்திற்காக அவளால் காதலை ஏற்க முடியாமல் போயிருந்தாலும், இதைப் படித்தால் அவள் மனம் கஷ்டப்படவே செய்யும்.

    -----------------------------------

    ஐந்தாறு வருடங்களுக்கு முன் நாம் அடிக்கடி விளையாடும் விளையாட்டு இது. இந்தப்பாடலின் முதல் வரியைக் கண்டுபிடிக்க முடியுமா?

    கலங்காதே ராசா காலம் வரட்டும்
    நள்ளிரவு போனபின்னே வெள்ளி முளைக்கும்

    ReplyDelete
  2. 1. தினமும் எல்லோருக்கும் நடைபெறும் சம்பவம் என்றால் நானும் கவலைபடப்போவதில்லை.. ஆனால் இங்கே, இதுபோன்ற சில இரக்க உள்ளம் கொண்ட வள்ளள்களால் நான் மட்டும் அவ்வப்போது குறிவைத்து தாக்கப்படுகிறேனே..
    2. அவள் படித்து கஷ்டப்பட வேண்டும் என்றோ, என் மீது பரிதாபம் வர வேண்டும் என்றோ கண்டிப்பாக நான் எழுதவில்லை .. என்னுடைய ஆற்றாமைகளை எழுதியிருக்கிறேன் .. அவ்வளவே!!
    3. பாட்டு என்னமோ நல்ல பாட்டுதான்.. ஆனா அஞ்சாறு வருஷம் ஆகிருச்சான்னு தான் ஆச்சர்யமா இருக்கு..

    எது எப்படியோ, எரிச்சல் படாமல் படித்ததற்கு (என்று நம்புவேனாக) மிக்க நன்றி!!

    ReplyDelete