Pages

Thursday, April 02, 2009

மற்றுமொரு "சொல்லத்தான் நினைக்கிறேன்"

சமீபத்தில் இந்தக் கதையை "கர்ணன் Vs அர்ஜுனன்!!" என்ற தலைப்பிலே ஒரு வலைப்பதிவில் படித்தேன்..
இணைய முகவரி -> http://ninnaicharan.blogspot.com/2009/02/vs.html

கர்ணனுக்கு கிடைக்கும் புகழ் குறித்து அர்ஜுனனுக்கு எரிச்சல். அதை கண்ணனிடம் தெரியப் படுத்தினான்.

அவனைத் தெளிய வைக்க எண்ணிய கண்ணன், ஒரு நாள், ஒரு தங்க குன்று ஒன்றை உருவாக்கி, அர்ஜுனனை அழைத்து ஒரு மண் வெட்டி ஒன்றைக் கையில் கொடுத்து, “ இந்த குன்றை இன்று மாலைக்குள் காலி செய்.. யாருக்கு வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் தானம் செய்து கொள்” என்றான்.

அர்ஜுனனும் காலையிலிருந்து போவோர் வருவோருக்கெல்லாம் வெட்டி வெட்டி கொடுத்துக் கொண்டே இருந்தான். தங்கம் தீருவதாகத் தெரியவில்லை. மாலையும் ஆகி விட்டது. இன்னும் அரைமணி நேரத்திற்குள் முடிவதாகவும் தெரியவில்லை. கண்ணனை அழைத்துச் சொன்னான் அர்ஜுனன்.

இதற்காகவே காத்திருந்த கண்ணன், கர்ணனை அழைத்து விபரம் சொன்னான்.

சரி என்று தலையாட்டிய கர்ணன், அவ்வழியே சென்ற இருவரை அழைத்து, ” இந்தத் தங்க குன்றை பாதிப் பாதியாக்கி, நீங்கள் இருவரும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு நடையைக் கட்டினான்.

அப்பொழுத்தான் அர்ஜுனனுக்கு புரிந்தது, அவனவன் தகுதிக்கான புகழ்தான் கிடைக்கும், அடுத்தவனைப் பார்த்துப் பொறாமைப் படுவதில் அர்த்தமில்லையென்பது.

இப்போ என்னேட கேள்வி??

கொடுப்பது எனத் தீர்மானித்ததும், தானத்தின் அளவை மதிப்பிடாமல், ஒரு நொடியினில் தானம் செய்துவிட்ட கர்ணன், கொடையில் சிறப்பினும், அவ்வளவு தங்கத்தையும் இருவருக்கு மட்டுமே பகிர்ந்தளித்தான்.

விலையுர்ந்த தானம் என்பதால் எல்லோருக்கும் 'பகிர்ந்தளிப்போம்' என்று எண்ணி, அளந்து மதிப்பிட்டு, எல்லோருக்கும் தானம் செய்தாலும், தானத்தை அளந்ததான் அர்ஜுனன்..

ஆகக் கூடி, கர்ணன் சிறந்தவனா, அர்ஜுனன் சிறந்தவனா?


இதே கதையை, திருமுருக கிருபானந்தவாரியார் அவர்களது ஆன்மீக சொற்ப்பொழிவொன்றிலே "தானத்திலே சிறந்தவன் கர்ணனா தர்மனா" என்று அவர் பேசக் கேட்டிருக்கிறேன்..
மேற்கூறிய வலைப்பதிவர் அதை "கர்ணனா அர்ஜுனனா" என்று மற்றொரு இணையத்திலே படித்ததாகத் தெரிவித்தார்..

இந்தத் தருணத்திலே மற்றுமொரு விஷயத்தை நான் குறிப்பிட விரும்புகின்றேன்..
மதுரையைச் சேர்ந்த முனைவர் திரு.ஞானசம்பந்தன் அவர்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரிந்திருக்குமா என்று தெரியவில்லை.. இயல்பான நகைச்சுவையோடு மேடைகளிலே உரையாற்றக்கூடியவர்.. நிறைய புத்தகங்களையும் எழுதி இருக்கிறார்.. அவருடைய நகைச்சுவைகள் எந்த தரப்பினரையும் புண்படுத்தாதவகையிலே அமைந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு தனிச்சிறப்பு..

சன் தொலைக்காட்சியிலே அசத்தப் போவது யாரு என்கிற நிகழ்ச்சியிலே மதுரை முத்து என்றொருவர் பேசக் கேட்டிருப்பீர்கள்.. ஞானசம்பந்தன் அவர்களை தெரியாதவர்களுக்குக் கூட முத்துவை நன்றாக தெரிந்திருக்கும்..
முத்து சொல்லும் நகைச்சுவைகளிலே சுமார் நாற்பது சதவிகிதம் ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய புத்தகங்களிலிருந்தே எடுக்கப்பட்டதாக இருக்கும்..

உரியவர் என்றொருவர் இருக்க அதை வேறொருவர் எந்த வித சிரமமும் இல்லாமல் களவாடி பெயர் பெற்றுக்குக்கொள்வது மிகவும் கேவலமான ஒன்று.. இதை சமீபத்தைய ஒரு பேட்டியில் ஞானசம்பந்தன் அவர்களே மிகுந்த வேதனையுடன் (எவருடைய பெயரையும் குறிப்பிடாமல்) தெரிவித்திருக்கின்றார்..

முத்து போன்றவர்களுக்கும், தன்னுடைய கற்பனைக்கும்/சிற்றறிவிற்கும் ஏற்றவாறு உண்மையான கதைகளை மாற்றி ஊடகங்களில் சொல்பவர்களுக்கும் "மானம் மாரியாத்தா, சூடு சூலாயுதம், வெக்க வேலாயுதம்" (நன்றி - கவுண்டமணி) போன்று எதுவுமே இருக்காது போலத்தான் தெரிகிறது.. "M S விஸ்வநாதன் - சொல்லத்தான் நினைக்கிறேன்.. உள்ளத்தால் துடிக்கிறேன்" என்கிற என் முந்தைய பதிவிலேயே நான் இதை சொல்லியிருப்பேன்...

என்ன செய்வது.. இது போன்ற சிலவற்றை கடந்து வரும்போது மறுபடியும் சொல்ல வேண்டியிருக்கிறதே..

நன்றி!!

No comments:

Post a Comment